Published Date: August 28, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES

8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் பதிவேற்றம்:
தமிழ் இணைய கல்விக்கழகம் மூலம் 8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கிய 7 கணினி தமிழ் மென்பொருள்கள் மற்றும் 'தமிழைப் பிழையின்றி' எழுதுவோம் என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா கோட்டூர் புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்வி கழகம் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மென்பொருள்களையும், நூல்களையும் வெளியிட்டு பேசியதாவது:
தமிழ் இனத்தையும், கலாச்சாரத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் தமிழ் மொழியை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமிழ் மொழியை மாற்றி அதை அனைவரிடமும் கொண்டு செல்லும் பணியில் தமிழ் இணைய கல்வி கழகம் ஈடுபட்டு வருகிறது.
தமிழ் கற்பிப்பு: உலகம் முழுவதும் 38 நாடுகளில் 175 மையங்கள் அமைத்து அதன் மூலம் இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம் 71,250 மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். சென்னையில் உள்ள 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்கள், பருவ இதழ்கள், 8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு தனித்தமிழ் மாநாடு நடத்தப்பட்டு இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதில் வெளியிடப்படும் என்றார் அவர்.
Media: Dinamani